புனித ஹஜ் பயண விண்ணப்பம்
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ்குழு அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களிடம் விண்ணப்பங்களை பெறுமாறு மும்பையில் உள்ள இந்திய ஹஜ்குழு தமிழக ஹஜ்குழுவிற்கு தெரிவித்துள்ளது.
இப்பயணத்திற்கான விண்ணப்பங்கள் மூன்றாம் தளம், ரோஸிடவர், எண் 13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் உள்ள ஹஜ்குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து வரும் 5ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண் 30683623887ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலுடன் தமிழக ஹஜ்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். பரிசீலனைக் கட்டணமாக நபர் ஒருவருக்கு செலுத்தப்படும் 200 ரூபாய் திருப்பி தரப்படாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.3.09. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பின் அன்னியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீதம் தொகையுடன் முழுமையாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

