1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?
10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?
16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?
18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா?உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெருங்கள்.
ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.
இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது :
``உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.
பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.
கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.
சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.
இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.
உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ``ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.
எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.
உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?
செய்தி, படங்கள் : டி.ஜோசப்
கேன்சர் ஆபத்து!
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும்.
நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது'' என்று எச்சரிக்கிறார்.
நன்றி - குமுதம்
சர்க்கரை நோய் என்பது எது?
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்கிறார்கள்.
புதிய ஆய்வுகள்!
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோய்க்கும் இதயம் தொடர்பான நோய்க்கும் (Cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, இரத்தத்திற்கு வெளியே இன்சுலின் குளுக்கோஸாக மாறிய பின்னர்தான் ரத்த செல்களுக்குள் செல்லும். ஆனால், குளுக்கோஸின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பயன்படுத்த முடியாமல் உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்தான் இதயநோய் (CVD) மாதிரியான நோய்கள் வருகின்றன.
இன்சுலின் அளவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு உயரும்போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும் இதய நோய் வரலாம் என்கிறார்கள். மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக எடையுள்ளவர்களுக்குத்தான் (over weight) இன்சுலின் சுரப்பதில் தடையும் ரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்குத்தான்
‘ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy cholesterol) உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோய் (diabetes), இதயநோய் (Heart disease), இதயத்தாக்கம் (stroke) போன்றவற்றிற்கான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.
கீழே உள்ள சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்துப் போராடி, சரிசெய்ய உதவும்.
1. நடை பயிற்ச்சி செய்தால்... டயாபடீஸை விரட்டலாம் :
அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதோடு இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்த வழி. முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உடல் எடையைக் குறைக்கமுடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்கமுடியும். ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிகமிகக் குறைவு.
2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்!
காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், காலை உணவை யாரும் தவறவிடாதீர்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது.
3. மகிழ்வான சூழல் :
(Laugh it up)பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும் என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன. இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக குறைவு என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஒருநாள் சீரியஸான விரிவுரையைக் கேட்க வைத்திருக்கிறார்கள். இன்னொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியஸான விரிவுரையைக் கேட்ட நாளைவிட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய்விட்டுச் சிரித்த நாளில் அவர்களின் குளுக்கோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததைக் காட்டியதாம்.
4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:
உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள். சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும். சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.
நன்றி - குமுதம்