மதக்கலவரங்களாலும், துவேசங்களாலும் மாசு படிந்துள்ள நம் பாரதத் தாய்திருநாட்டை கள்ளம் கபடமில்லா மனித நேயம் எனும் வெள்ளைத் துணி கொண்டு துடைப்போம் வாரீர்.
எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் யாவரும் நம் தாய்த்திருநாட்டின் தவப்புதல்வர்கள் தான் எனும் எண்ணம் நம் யாவரின் உள்ளங்களிலும் தளைத்திடல் வேண்டும். நம் உண்மையான தேசப்பற்றிற்கு யாருடைய சான்றிதழும், ஐ.எஸ்.ஐ (ISI) முத்திரைகளெல்லாம் தேவையில்லை. அதையும் தன் பணபலம் கொண்டு எளிதாக வாங்கும் உலகம் இது.
மேல் சாதி என்பவன் வானிலிருந்து குதித்தவனும் அல்ல. கீழ் சாதி என்பவன் பூமியிலிருந்து முளைத்தவனும் அல்ல. நம் எல்லோரின் தேகத்திலும் தடையின்றி ஓடும் குருதியின் நிறம் சிகப்பு அன்றி வேறில்லை.
நம் தாய் நாட்டின் உண்மையான பற்று என்பது நாட்டின் குடியரசு, சுதந்திர தினங்களில் தன் (இதயத்தின் மேல்) சட்டையில் அணியும் மூவர்ணக் கொடி மூலம் மட்டும் தான் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதில்லை.
தேசப்பற்று என்று சொல்லி வெறும் வாயில் ஊரறிய "வந்தே மாதரம்" கூறிவிட்டு, பிறகு யாரும் அறியாமல் தன் மறைமுக வேலைகள் மூலம் நம் நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் தான் உண்மையில் "அக்மார்க்" முத்திரை குத்தப்படாத சுத்தமான தீவிரவாதிகள்.
ஒரு வேளை உணவிற்கே அல்லோலப்படும் ஏழை, எளியோர் வாழும் நம் தாய் நாட்டில் பதுக்கல், கலப்படம், கடத்தல், கொள்ளைகள், சுயநலத்திற்காக ஈவு இரக்கமின்றி கொலைகள் மூலம் கோடி கோடி சம்பாதித்து அதை அரசுக்கு முறையே கணக்குகாட்டாமல் அதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் அனைவருமே அரசால் அறிவிக்கப்படாத தீவிரவாதிகள் தான்.
"திரைக் கடல் ஓடியும், ரியாலைத் (நாட்டிற்கேற்ப வேறுபடும்) தேடு" என்ற புது மொழிக் கேற்ப சம்பாத்தியத்திற்காக அயலநாடுகள் சென்று விடுமுறையில் நம் தாய்த்திரு நாட்டிற்கு திரும்பும் பொழுது இங்கு பல நிலை/சீர்க்கேட்டை கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!
பணக்கார வர்க்கங்கள் மேலும், மேலும் வானுயர பறக்க, நடுத்தர ஏழை, எளியோரின் நிலை மட்டும் நிலத்தடி நீர் போல் நாளாக, நாளாக அடி பாதாளத்திற்கு இறங்கிப் போய்க்கொண்டே இருப்பது ஏனோ?
இன்றைய சூழ்நிலையில் நம் தாய்த்திருநாட்டில் பரவலாக நடக்கும் மதக்கலவரங்கள் ஒடுக்கப்பட்டு, மாசடைந்த நம் எல்லோரின் (எல்லா மதத்தவரின்) உள்ளங்களின் தூசுகளும் மனிதநேயத்தால் துடைக்கப்பட்டு, எல்லா சமூகக்கேடுகளும் களையப்பட்டு "பிறக்கும் பொழுது எதைக் கொண்டு வந்தோம் கடைசியில் நம்முடன் எடுத்துச் செல்ல" என்ற உயரிய எண்ணத்தால் நாம் யாவரும் பிணைக்கப்பட்டு, நம் தாய்த்திருநாட்டின் வல்லமைகளை உலகறியச் செய்து, இன்றைய வல்லரசுகளின் தலைவனாக்கி அதன் உன்னத ஆசனத்தில் அமரச்செய்து அழுகு பார்ப்போம். வாரீர்! புறப்படுவோம் ஓரணியில். இதற்குத் தலைவர்கள் தேவையில்லை, கட்சிக் கொடிகளும் அவசியமில்லை. கலவரங்கள் இல்லை. நம் உள்ளத்தூய்மையே இதன் தாரக மந்திரமாக இருக்கட்டும் வாரீர். ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடிப்போம் வாரீர்.
இஸ்லாத்தின் உயரிய கொள்கையாம் "உம்மதம் உனக்கு; எம்மதம் எனக்கு" என்ற கொள்கையை நாமெல்லாம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் கடைபிடித்தால் நம் பாரத்திருநாடு என்றோ வல்லரசுக் கனவை எட்டி இருக்கும் என்பது வருத்தம் கலந்த உண்மை.
மதக்கலவரங்களாலும், பல்வேறு சண்டைகளாலும் நம் மண்டைகள் தான் உடைக்கப்பட்டனவே தவிர நம் தாய்நாட்டிற்காக, மக்களுக்காக சாதித்தது தான் என்ன? ஒழியட்டும் ஆணவப் பேய். அழியட்டும் அநியாய அடக்குமுறைகளும், அநீதிகளும். ஓங்கட்டும் நம் தூய மாசற்ற தேசப்பற்று. நம் வல்லரசுக் கனவுகள் நனவாகட்டும். புதியதோர் வல்லரசு செய்வோம் வாரீர்.
சகோ. ரஃபியாவின் ஆழமான சிந்தனைகளிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களின் சாரம் தான் இவை. அதை இங்கு நம் யாவருடைய பார்வைக்காகவும் தொகுத்து வழங்கி மகிழும்.
எம்.எஸ்.எம். நெய்னா முகம்மது.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103
குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியினையும் சமுதாய மக்கள் இன்று சிந்தித்து செயல்பட முன்வரவேண்டும். இன்றைய இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதை காணமுடிகிறது. அந்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையில்தான் இருக்கின்றனர். அது சரியா? தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள். யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார். யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா? என்று கேட்கப்பட்டதற்கு "அதற்கு அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை போர் செய்யக்கூடாது" என்று கூறினார்கள். அறிவிப்பாவர்: உம்முஸமா(ரழி) நூல்: திர்மிதி, அஹ்மத்
வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன். என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான்(ரழி) நூல்: திர்மிதி
நபி(ஸல்) அறிவிப்புப்படி "ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள் என அறிய முடிகிறது. அந்த சத்தியத்தை நாம் மக்களிடம் எடுத்து வைக்கவேண்டிய கடமை முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால் அல்லாஹ் கூறியபடி, நபி(ஸல்) அவர்கள் அறிவித்த சத்தியத்தை எடுத்து வைப்பதில் ஒற்றுமையாகவோ, உறுதியாகவோ இருப்பதற்கு முன்வருவதும் இல்லை.
ஏன் இந்த நிலை என்பதை சிந்த்திக்கவேண்டும். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் பிற சமுதாயத்தினர் நம்மை எளிதில் வென்றுவிட முடிகிறது.
நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். அல்குர்ஆன் 2:143
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிாிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்குர்ஆன் 3:105
இத்தைகைய வசனங்கள் பிரிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒன்று பட்ட சமுதாயமாகவே இருக்க வேண்டும் என்பதையே தான் வலியுறுத்துகின்றன. ஆதலால்தான் அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது திருமறையை பற்றிப்பிடிக்க கூறுகிறான். இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் பல தனித்தனி நார்களாக இருந்ததைத்தான் ஒன்றினைத்து கயிறாக உருமாற்றுகிறோம் என்பதை நமக்கு எளிதான உரை நடையில் உணார்த்துகிறான்.
"ஜமாஅத்தை பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்து செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்; எவர் சொர்க்கத்தின் நறுமணத்தை நுகர விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தை அவசியமாக்கிக்கொள்ளட்டும்" இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர்(ரழி) அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி
ஜமாஅத்தின் (கூட்டமைப்பின்) அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதை மேற்காணும் ஹதீஸ்கள் மூலம் அறியமுடிகிறது. மேலும் கூட்டமைப்புகள் செயல்படும் முறைக்கு உதாரணமாக பல ஊர்களில் ஜமாஅத் கட்டுப்பாடு என்று அமைத்து பல காரியங்களை ஒற்றுமையுடன் செயல்படுத்தி வருகிறார்கள். இதுபோ, நாடு முழுவதும் ஒரே ஜமாஅத்தை முன்னிலைப்படுத்தி ஒரே கருத்தான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுத்திட முன்வரலாம். பிரிந்து இருக்கும் பல அமைப்புகளை ஒன்றுபட அழைக்க முயற்சிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் ஒரே அமைப்பாக செயல்பட முடியும், ஒரே அமீரின் கீழ் செயல்பட முடியும் என்று கூறுவது சரியல்ல.
ஒன்றுபட்டால் ஆட்சி அதிகாரம் நம்மைத்தேடி நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும். இதை விடுத்து பல குழுக்களாக செயல்படலாம் என முடிவெடுத்து செயல்பட நினைப்பவர்கள் திருமறையின் 3:103, 3:105 வசனங்களுக்கு அவர்களே பதில் கூறட்டும்!
மண்டபம் M.அப்துல் காதிர்